ஒவ்வொரு ஏப்ரல் மாதமும், பெற்றோர்கள் ஒரே விதமான மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர் என்றால் அது பள்ளிக் கட்டணம். ஆனால் இன்று தொடங்கப்படக்கூடிய ஒரு சிறிய மியூச்சுவல் பண்ட் எஸ்.ஐ.பி (SIP) அடுத்த ஆண்டு பள்ளிக் கட்டணத்தை சிரமம் இல்லாமல் உணர வைக்கும் என்று நான் உங்களிடம் சொன்னால் நம்ப முடிகிறதா?
பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு, பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான நேரம் வரப்போகிறது என்று தெரிந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இது எதிர்பாராத அதிர்ச்சியாகவே உணர வைக்கிறது. அதற்காக நம் சேமிப்பை கரைப்போம், கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வோம் அல்லது யாரிடமாவது கடன் வாங்குவோம். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை ஏற்படும் இந்த பதற்றத்தை திட்டமிட்ட, கணிக்கக்கூடிய பழக்கமாக மாற்ற ஒரு எளிய, ஒழுக்கமான வழி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
அந்த எளிய தீர்வு, இலக்கு அடிப்படையிலான SIP ஆகும்.
வருடாந்திர செலவுகளுக்கு SIP எப்படி சரியாக உதவுகிறது?
பள்ளிக் கட்டணம் என்பது குறுகிய கால ஆனால் நிச்சயமான, தவிர்க்க முடியாத செலவு.
மேலும் உங்களுக்குத் தெரியும்:
- அது எப்போது வரும் (ஏப்ரல்)…
- அது எவ்வளவு (தோராயமாக)…
- ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என்பது…
எனவே கடைசி நேரத்தில் போராடுவதற்குப் பதிலாக, ஒரு எஸ்.ஐ.பி முதலீடு உங்கள் வசதிக்கேற்ப நிதியை திட்டமிட அனுமதிக்கிறது. இதில்
- மாதாமாதம் சேமிக்க முடியும்
- உங்களுக்குத் தேவையான சரியான தொகையை உருவாக்கலாம்
- கிரெடிட் கார்டு வட்டி அல்லது கடைசி நிமிட மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்
- நிதி ரீதியாக சரியான நிலையில் இருப்பதாக உணர்வீர்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகை நீங்கள் நினைப்பதை விட மிகக் குறைவு.
ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்
உதாரணமாக: ஆண்டு பள்ளி கட்டணம் ₹60,000
பெரிய நகரங்களில் உள்ள பல பெற்றோர்கள் ஆண்டுதோறும் ₹50,000-70,000 வரை பள்ளி கட்டணம் செலுத்துகிறார்கள்.
₹60,000 கட்டணத்திற்கு, செலுத்த வேண்டிய எஸ்.ஐ.பி: ₹5000/மாதம் – இலக்கு 12 மாதங்களில் சுமார் ₹60,000
பெரும்பாலான சம்பளம் பெறும் பெற்றோர்களுக்கு ஒரே நேரத்தில் ₹60,000 என்பது கடினம், ஆனால் மாதத்திற்கு ₹5000 என்பதை மிக எளிதாக கையாள முடியும். அதேநேரம், சாதாரண வங்கி சேமிப்புக் கணக்கில் மட்டும் சேமிக்கக்கூடாது, ஏன் தெரியுமா?
எளிய காரணம்: நீங்கள் நிலையாக இருக்க மாட்டீர்கள். பெரும்பாலான மக்கள் சேமிக்கத் தொடங்கி, பாதியிலேயே பணத்தை எடுக்கிறார்கள், பின்னர் அடுத்த ஆண்டு மீண்டும் அதே மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
அதேநேரம் எஸ்.ஐ.பி முதலீடு:
- ஒழுக்கமான முதலீட்டை கட்டாயப்படுத்துகிறது
- பணத்தை அன்றாட செலவுகளிலிருந்து பிரித்து வைத்திருக்கிறது
- சும்மா இருப்பதற்குப் பதிலாக அந்த முதலீடு சிறிது வளர உதவுகிறது
- மேலும் தானாகவே “பள்ளி கட்டணத்திற்கான நிதியை” உருவாக்குகிறது
இது ஒரு இ.எம்.ஐ (EMI) போன்றது, அதேநேரம் உங்கள் எதிர்கால மன அமைதிக்கு உதவுகிறது.
தெளிவாக புரிந்து கொள்ள ஒரு சிறிய கணக்கீடு
உங்கள் பள்ளி கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் 8% வளர்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
இந்த ஆண்டு கட்டணம்: ₹ 60,000
அடுத்த ஆண்டு: ₹ 63,200
அதற்கு அடுத்த ஆண்டு: ₹ 66,656
நீங்கள் உங்கள் எஸ்.ஐ.பி முதலீட்டை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறிது அதிகரித்தால், பள்ளி கட்டணம் உயர்ந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். அதுதான் திட்டமிட்ட முதலீட்டின் சக்தி.
இந்த SIP முதலீட்டுக்கு எந்த வகையான நிதியைப் பயன்படுத்த வேண்டும்?
- குறுகிய கால கடன் நிதி
- ரொக்க நிதி
அவை நிலையானவை, அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாதவை, மேலும் உங்கள் பணம் வங்கிக் கணக்கை விட சற்று அதிகமாக வளர உதவுகின்றன. மேலும் சுற்றுலா கொண்டாட்டங்களுக்கும் இதே எஸ்.ஐ.பி தந்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம். ஒவ்வொரு டிசம்பரிலும், ஒவ்வொரு குடும்பமும் விடுமுறையைக் கனவு காண்கிறார்கள், ஆனால் அதை நிதி ரீதியாக திட்டமிட போராடுகிறார்கள்.
கோவா சுற்றுலா பயணத்திற்கு ₹30,000 செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். மாதம் ₹2,500 எஸ்.ஐ.பி முதலீடு செய்யுங்கள் – அடுத்த ஆண்டு ₹30,000 உங்கள் கையில் இருக்கும். இப்படி செய்யும்போது, விடுமுறைகள் இனி “ஆடம்பரங்களாக” இருக்காது, திட்டமிடப்பட்ட இலக்குகளாக இருக்கும். முடிவாக, இன்று சிறிய முதலீடு செய்வதன் மூலம் ஏப்ரல் மாத மன அழுத்தத்தை நம்பிக்கையாக மாற்றலாம். அதாவது இன்றைய ஒரு சிறிய எஸ்.ஐ.பி அடுத்த ஆண்டு பள்ளி கட்டணத்தின் முழு நிதி அழுத்தத்தையும் நீக்கும்.
கூடவே இதை கற்பனை செய்து பாருங்கள்:
- கடைசி நிமிட கடன் வாங்குதல் இல்லை
- கடன் மற்றும் பில்கள் இல்லை
- சேமிப்பு கரையவில்லை
- மன அழுத்தம் இல்லை
அதேநேரம் சுமூகமான, திட்டமிடப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தலாம்.


